இதுதான் மாயை
ஒருமுறை நாரதர், கிருஷ்ணரைப் பார்த்து, பகவானே, மாயையை எனக்குக் காண்பியுங்கள் என்று கேட்டார். சில நாட்கள் கழிந்தன, ஒருநாள் கிருஷ்ணர் நாரதரைத் தன்னோடு ஒரு பாலைவனப் பயணத்திற்கு வருமாறு அழைத்தார். பலகாத தூரம் நடந்தபிறகு அவர் நாரதரைப் பார்த்து, நாரதா எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. சிறிது தண்ணீர் கொண்டு வர முடியுமா? என்று கேட்டார். பகவானே உடனே கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நாரதர் புறப்பட்டார்.
சிறிது தூரத்தில் ஒரு கிராமம் இருந்தது. அவர் அந்தக் கிராமத்தில் சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். அழகான இளமங்கை ஒருத்தி கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்தில், கிருஷ்ணர் தண்ணீருக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும், தண்ணீர் கிடைக்காவிட்டால் தாகத்தால் ஒருவேளை அவர் இறந்துவிடக்கூடிய சூழ்நிலையில் இருப்பதையும் நாரதர் மறந்தார். எல்லாவற்றையும் மறந்துவிட்டு அந்தப் பெண்ணோடு பேசத் தொடங்கினார். அன்று அவர் திரும்பிப் போகவில்லை. அடுத்த நாளும் அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டே இருந்தார். அவர்கள் பேச்சு காதலாக மலர்ந்தது. இறுதியில் அந்தப் பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு அவளது தந்தையிடம் நாரதர் கேட்டார். அவர்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளையும் பெற்றார்கள். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன. நாரதருடைய மாமனார் இறந்தார். அவரது சொத்திற்கு நாரதர் வாரிசானார். மனைவி, மக்கள், நிலபுலங்கள், ஆடு மாடுகள் இவற்றோடு மிகவும் இன்பமான வாழ்க்கை வாழ்வதாகத்தான் நாரதர் நினைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் திடீரென்று பெரிய வெள்ளம் வந்தது. பொங்கிவந்த ஆற்று வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு கிராமத்திற்குள் புகுந்தது. வீடுகள் இடிந்து விழுந்தன. மனிதர்களும் மிருகங்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். வெள்ள வேகத்தில் எல்லாம் மிதந்து சென்று கொண்டிருந்தன. நாரதர் தப்பிக்க வேண்டியிருந்தது. மனைவியை ஒரு கையிலும், இரண்டு குழந்தைகளை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு, தோளில் ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டு, அந்தப் பயங்கர வெள்ளத்தைக் கடக்க முயன்றார். சில அடிகள் எடுத்து வைத்தவுடனேயே வெள்ளத்தின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதை உணர்ந்தார். அவரது தோளில் இருந்த குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நாரதர் துயரத்தால் கதறினார். அந்தக் குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில், கையில் பிடித்திருந்த குழந்தைகளிலும் ஒன்று வெள்ளத்தில் சென்று விட்டது.
கடைசியில், அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த அவருடைய மனைவியையும் வெள்ளம் அடித்துச் சென்றது. அவரைக் கரையில் ஒதுக்கியது. துயரத்தால் கதறினார் அவர். அப்போது, மகனே தண்ணீர் எங்கே? நீ தண்ணீர் எடுத்துவரப் பேனாய் நான் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்; நீ போய் அரைமணி நேரம் ஆகிவிட்டது என்று ஒரு மெல்லிய குரல் அவருக்குப் பின்னால் கேட்டது. அரைமணி நேரமா! என்று நாரதர் அதிர்ச்சியோடு கேட்டார். பன்னிரண்டு நீண்ட ஆண்டுகள் அவர் மனத்தில் ஓடி மறைந்துவிட்டன. ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் அரைமணி நேரத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன! இதுதான் மாயை.
நாம் எல்லோரும் ஏதாவது ஒருவிதத்தில் இந்த மாயையில் சிக்கியிருக்கிறோம். இது புரிந்துகொள்வதற்கு மிகவும் சிரமமான, கஷ்டமான விஷயம். இது எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் போதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை நம்பியவர் சிலரே. நாமே எதையும் அனுபவித்தறியாமல் நம்மால் எதையும் நம்பமுடியாது. இது எதைக் காட்டுகிறது? மிகவும் பயங்கரமான ஒன்றைத்தான். எல்லாமே பயனற்றது. எல்லாவற்றிற்கும் முடிவுகட்டும் காலம் என்ற ஒன்று வருகிறது. அது எதையும் விட்டு வைப்பதில்லை. புண்ணியவான், பாவி, அரசர், அழகன், அழகற்றவன் என்று எல்லோரையும் விழுங்கி அது ஏப்பம் விடுகிறது. அது எதையுமே விட்டு வைப்பதில்லை.
அழிவு என்ற ஒரே குறிக்கோளை நோக்கியே எல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றன. நம் அறிவு, நம் கலைகள், நமது விஞ்ஞானங்கள் எல்லாமே அழிவே நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றன. இந்த அழிவைத் தடுக்கவோ, கணநேரம் பிடித்துவைக்கவோ யாராலும் முடியாது. ப்ளேக் நோய் பரவி விட்டால், மது, நடனம் என்று பல்வேறு வீணான முயற்சிகளால் அந்த நோயை மறப்பதற்கு மக்கள் முயல்வதுபோல், நாமும் காலத்தின் சுழற்சியை மறப்பதற்கு முயலலாம். எல்லா வகையான புலனின்பங்களிலும் ஈடுபடுவதன்மூலம், காலத்தின் சுழற்சியை மறப்பதற்கு நாம் முயல்கிறோம். இதுதான் மாயை.
-
-சுவாமி விவேகானந்தர்
நன்றி
Comments
Post a Comment