கங்கா ஸ்நானம்
ஒரு பெண்ணுக்கு நதிகளின் மீது கொள்ளைப் பிரியம். அவற்றைத் தனது தாய்மார்கள்களாகவே நினைத்தாள்.
தன் வீட்டிலிருந்த மூன்று பித்தளை குடங்களைப் பளபளவென துலக்கி நீரெடுத்து வைப்பாள். அந்தக் குடங்களுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி என்று பெயரிட்டிருந்தாள்...
யாராவது குடிக்க நீர் கேட்டால், மூன்று குடங்களில் இருந்தும் சிறிதளவு தண்ணீர் மொண்டு கலந்து 'திரிவேணி தீர்த்தம்' என கொடுப்பாள்..
"குடத்து தண்ணீரை 'திரிவேணி தீர்த்தம்' என்கிறாளே! அப்படியானால் இவளது வீடு என்ன பிரயாகையா?" என்று ஊரார் கேலி செய்தனர்.. ஆனால், அவள் அதைக் கண்டு கொள்ள மாட்டாள். தன் கருத்தில் அவள் நம்பிக்கையுடன் இருந்தாள்..
ஒரு முறை அவளது கணவன் காசிக்கு கிளம்பினான். அவனது தாய், மகனிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து, "மகனே! இதை அணிந்து கொள். இது சாதாரண மோதிரமல்ல, உன்னைப் பாதுகாக்கும் கேடயம். தாயத்துக்கு ஒப்பானது..." என்று கூறி அணிந்து விட்டாள்...
காசிக்குச் சென்று கங்கையில் நீராடினான். மோதிரம் கழன்று கங்கையில் விழுந்து விட்டது. இவனும் எவ்வளவோ துழாவிப் பார்த்தான்... மோதிரம் சிக்கவில்லை...
வீட்டிற்கு வந்து மோதிரம் காணாமல் போனதைச் சொன்னான்.
அவனது மனைவி, "இதற்கா வருத்தப்படுகிறீர்கள்? கங்கையில் தானே தொலைத்தீர்கள்! கங்கா தேவி தானாக மனமுவந்து கொடுப்பவர்களின் பொருட்களையே ஏற்பாள்... அவள் கொடுப்பவளே தவிர எடுப்பவளில்லை.... நம் வீட்டிலேயே கங்கா இருக்கிறாளே!" என்று கூறி, 'கங்கா' என்று பெயர் சூட்டிய குடத்துக்குள் கையை விட்டாள்... என்ன ஆச்சரியம் ! உள்ளே மோதிரம் இருந்தது.... மகிழ்வுடன் கங்காமாதாவை வணங்கினர்.....
கங்காதேவியை வணங்கியோர் இழந்ததைப் பெறுவர் என்பது ஐதீகம். நம் ஊரிலே உள்ள ஆறு, ஏரி, கிணறு, ஓடை இன்னும் பல வடிவங்களில் அவள் இருக்கிறாள்..
தீபாவளித் திருநாளன்று நாம் குளிக்கும் போது, எந்தளவுக்கு பக்தியுடன் நீராட வேண்டும் என்பது இப்போது புரிகிறதா!
இதனால் தான் அன்றைய குளியலுக்கு, 'கங்கா ஸ்நானம்' என்று பெயர் வைத்தனர்......
நன்றி
Comments
Post a Comment